திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.12 திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
பண் - நட்டபாடை
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங்
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.
1
தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.
2
விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொன்
டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.
3
சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா
நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.
4
அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
5
ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்
கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
6
தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (*)முடிய
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயல்
விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
முழவோடிசை (**)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.

(*) முடியர் என்றும் பாடம்.
(**) நடமுன் செயும் என்றும் பாடம்.
7
செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்
மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா(*)
முதவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.

(*) குறை யில்லா என்றும் பாடம்.
8
இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே
முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.
9
அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.
10
முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.53 திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
பண் - பழந்தக்கராகம்
தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே.
1
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார்
எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்
முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே.
2
வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி
நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்
சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்
மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே.
3
பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர்
நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்
நாடுதானும் ஊடமோடி ஞாலமும் நான்முகனும்
ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே.
4
வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்நீ யேந்தியாடி மேயது முதுகுன்றே.
5
சுரிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி
சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும்
அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.
6
இப்பதிகத்தின் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்
இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே.
8
ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக்
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்
ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும்
மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே.
9
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட
முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே.
10
மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை
பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
(*)... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...

(*) இச்செய்யுளின் கடைசி இரண்டடிகள் சிதைந்து போயின.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே.
1
அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே.
2
ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர், வைய முமதாமே.
3
ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
வாச மலர்தூவப், பாச வினைபோமே.
4
மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே.
5
மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே.
6
விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
படையா யினசூழ, உடையா ருலகமே.
7
பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.
8
இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே.
9
தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான்
நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.
10
நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.131 திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
பண் - மேகராகக்குறிஞ்சி
மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்
    எண்குணங்களும் விரும்பும்நால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
    பளிங்கேபோல் அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்
    கருதுமூர் உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
    ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.
1
வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
    வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
    புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
    மலருதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற்
    புகுந்துலவு முதுகுன்றமே.
2
தக்கனது பெருவேள்வி சந்திரனிந்
    திரனெச்சன் அருக்கன்அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
    தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு
    குயர்தெங்கின் குவைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
    நீள்வயல்சூழ் முதுகுன்றமே.
3
வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
    விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத்
    தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
    அரியெரிகால் வாளியாக
மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
    முதல்வனிடம் முதுகுன்றமே.
4
இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்
    ஒருபாலா யொருபாலெள்கா
துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப்
    பிடமென்பர் உம்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு
    மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவு மால்யானை இரைதேரும்
    வளர்சாரல் முதுகுன்றமே.
5
நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த
    நாதனிடம் நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
    கரையருகு மறியமோதி
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு
    நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைகள் முகம்மலர
    வயல்தழுவு முதுகுன்றமே.
6
அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்
    இருந்தருளி யமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்
    ஒன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்
    கெழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
    முத்துலைப்பெய் முதுகுன்றமே.
7
கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்
    இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை
    மலையைநிலை பெயர்த்தஞான்று
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்
    றூன்றிமறை பாடவாங்கே
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
    வாய்ந்தபதி முதுகுன்றமே.
8
பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
    பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்
    துறநாடி யுண்மைகாணாத்
தேவாருந் திருவுருவன் சேருமலை
    செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
    மேலுயர்ந்த முதுகுன்றமே.
9
மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட்
    டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
    உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
    முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
    தவம்புரியும் முதுகுன்றமே.
10
முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்
    முதுகுன்றத் திறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
    கழுமலமே பதியாக்கொண்டு
தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
    சம்பந்தன் சமைத்தபாடல்
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்
    நீடுலகம் ஆள்வர்தாமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com